அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர்
வாசிப்பு 55
அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர்
பொதுவாக ஒரு பெயருக்கும் அவர்களின் நிலைக்கும் பொருத்தம் அமைவது என்பது சாத்தியம் அற்றது.ஆனால் அரிதினும் அரிதாக சிலருக்கு அந்த பொருத்தம் கனகச்சிதமாக பொருந்தி போய் விடுகிறது .அந்த சிலரின் கவிதா வும் ஒருவர் என்பதை அவரின் "அன்பின் மறைமொழி" என்னும் இந்த கவிதை பொத்தகத்தை வாசிக்கும் போது நான் உணர்ந்தேன்.
இது ஒரு கவிதை பொத்தகம் என்பதை விட மொழிபெயர்ப்பு பொத்தகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஏன் என்றால் யாராலும் விளக்கி விட முடியாத மனிதர்களின் உள்ளத்தில் இருக்கும் வலி நிறைந்த உணர்வுகள் கலந்த மறைமொழியே அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் தோழி கவிதா.
ஒவ்வொரு வரிகளும் நம்மை நம் கடந்த காலத்திற்கும் காதலுக்கும் கூட்டி செல்கிறது. நம் வைக்கும் அன்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும், செய்யப்படும் நிகரிப்புகளையும், கொடுக்கப்படும் ஏமாற்றங்களையும் அதனால் ஏற்பட்ட சொல்ல முடியாத ஏக்கங்களையும் கவிதாவின் வரிகள்
நம் பின்னந்தலையில் தட்டி உணர்த்தி விடுகிறது.
சில வரிகள் அடைப்பு நீங்கி திறக்கப்பட்டு விட்ட காதுகளின்
வழியே உள் நுழையும் குளிர்காற்றை போல இதம் அளிக்கிறது.
அவற்றில் சில துளிகள் :
"உன் செயல்கள் ஆசை ஆசையாய் வாங்கிய பொம்மையைக் கொஞ்ச நாள்களில் கண்டுக் கொள்ளாத சிறுவனை ஞாபகப்படுத்துகிறது.
எப்போதும் இருக்கும்போது
ஒருவரின் அருமை புரிந்து கொள்ளப்படுவதே இல்லை.. போகிறேன் எனும்போது
கலங்குவதை விட
இருக்கும்போது
என் குறைந்தபட்ச
உணர்வுகளை
மதித்திருக்கலாம்...."
"நான் பேச நினைத்ததை எல்லாம் பேசியதில்லை.. சில சமயம் பேசுவதும் முழு மனதுடன் இல்லை. பல நேரம் உன் மனம் காயப்படக்கூடாது என, சில சமயம் என் பிம்பம் உடையக் கூடாது எனவும் நீள்கிறது...."
"பேசத் தெரியாமல் இல்லை. என் மௌனமும் உனக்குப் புரிய வேண்டும் என்பதால்.. ஆம், புரிதலுக்கு மௌனத்தை விடச் சிறந்த மொழி ஏது..?"
"என் வாழ்வில் நீ யார்? எதற்காக நீ வேண்டும்? என்னவாக வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை ஆனால் உன் இருப்பு எனக்குத் தேவையாக இருக்கிறது.
அது பட்ட மரம் துளிர்ப்பது போல்
மிக அழகாக இருக்கிறது"
"எல்லா முடிச்சுகளையும் கட்டவிழ்த்து விட்டு வா என்று அழைக்கிறாய் இதோ இப்போதே உன்னுடன் வந்து விடுகிறேன். என்னைத் துரோகம், பொறாமை வஞ்சகம், சூது அற்ற ஓர் அன்புசூழ் உலகிற்கு அழைத்துச் செல்கிறாயா..?"
மறைமொழி என்பது மந்திரம் என தொல்காப்பியம் உரைக்கிறது அதை உறுதி செய்யும் வகையில் கவிதாவின் இந்த அன்பின் மறைமொழியே படிப்பவர்கள் உணர்வு ரீதியான ஒரு மந்திரக்கட்டில் சிக்கிக்கொள்வார்கள் என்பது நிச்சயம்
அன்பின் மறைமொழி (Tamil Edition) https://amzn.eu/d/8yks7M9
✍️கோடி
.jpg)
Comments
Post a Comment