கானகன் - லக்ஷ்மி சரவணகுமார்.
வாசிப்பு 29
கானகன் - லக்ஷ்மி சரவணகுமார்.
காடுகள் தான் இந்த உலகத்தின் உயிர், அவைகள் இல்லை என்றால் இந்த உலகம் நீரின்றி, காற்றின்றி அழிந்து போகும். அப்படி உயிராக இருக்கும் காட்டை காப்பாற்றுவது அங்கேயே பிறந்து வாழும் கானகன்கள் தான், யார் வேண்டுமானாலும் வேட்டைக்காரன் ஆகலாம் ஆனால் காட்டை நேசித்து அதன் ஆத்மாவை உணர்ந்தவன் தான் கானகன் அக முடியும். அப்படி ஒரு ஆதிமலை என்ற காட்டையும் அதை காக்கும் பளியர்களயும் வைத்து சொல்லும் கதை... இல்லை கதை மூலமாக விரியும் காடு தான் இந்த கானகன்.
இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி, புலி மனிதனை வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் தான் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள் மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள்.
தங்கப்பனுக்கும் காட்டை நேசிக்கும் அவனது வளர்ப்பு மகன் வாசிக்கும் இடையில் நடக்கும் பாசம், வெறுப்புகள் மற்றும் உறவு சிக்கல் தான் கதையின் இயக்கம் என்றாலும் கதையில் நிகழும் மிருகத்தனமான வேட்டைகளும், மரத்தை வெட்டி காட்டை அழித்தலும், யானையின் வழி தடம் மறைத்து அமைக்க பட்ட கஞ்சதோட்டமும் அதனால் யானைகளின் ஆக்ரோஷமும் வாசிப்போரை அதிரவைக்கும்.
விலங்குகளின் வாழ்வியல் மற்றும் அதன் குணாதிசயங்களை அறிந்துகொள்ள எனக்கு பேராவல் உண்டு. இந்த நாவல் அந்த வகையில் எனக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. விலங்குகளுக்கு உணர்வுண்டு, மனிதனை விட ஒரு தேர்ந்த வாழ்க்கை நெறியை வகுத்து அதற்கு ஏற்றார் போல் வாழும் விலங்குகளை உணர்வுகளே இல்லாத மனிதனால் கண்டிப்பாக புரிந்துகொள்ள முடியாது. இந்த நாவலில் கதைமாந்தர்கள் வழியா விலங்குகளை அழகா புரிய வைக்குறார் லக்ஷ்மி சரவணக்குமார்.
புத்தகம் செல்லாயி மூலமாக பெண்ணியமும் பேசுகிறது "ஒருத்தனுக்கு மூணு பொண்டாட்டினு சொல்றத வேணா இந்த சமூகம் ஏத்துக்கும். ஒருத்திக்கு ரெண்டு புருஷன்னு சொன்னா இந்த சமூகம் ஏத்துக்குமா என்ன?" போன்ற வரிகள் ஆண் ஆதிக்கத்திற்கு விழும் செருபடிகள்.
மனைவியின் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறான் சடையன் அவன் மேல் அதே அளவு பிரியம் வைக்கும் செல்லாயி அதை விட அதிகமா தங்கப்பன் மேல பிரியம் வைக்குறா. தங்கப்பனோட வாழ்ந்துட்டு இருந்தாலும் சடையனையும் அவ காதலிக்க தவறல. “உனக்கு ரெண்டு அப்பா”ன்னு பெருமையா தன்னோட மகள் கிட்ட அவ அறிமுகப்படுத்தி வைக்குறா. தங்கப்பனை விட்டு விலகவும் முடியாது, அதே நேரம் சடையனையும் அவ கூட வச்சிருக்கணும்ங்குற அவளோட ஆசைக்கு ஒரு சலியூட்
ஒவ்வொரு அத்தியாயத்தில் வரும் உடல் உறவு காட்சிகள் அவசியம் அற்றவை.
இயற்கை வளங்களை பெருவணிகம் கொள்ளையடிப்பதும் சூறையாடுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஓர் அராஜகம். மனித குலத்தால் இயற்கையின் மீது தொடுக்கப்படும் இந்தப் போரினால் பாதிக்கப்படுவது இயற்கையின் சமநிலை மட்டுமல்ல, இயற்கையைச் சார்ந்திருக்கும் காட்டுயிர்களும் பழங்குடிகளுமே.
அதிகாரவர்க்கமும், வணிக முதலாளிகளும் இணைந்த ஒரு வலிமையான வலைப்பின்னலின் பேராசை காரணமாக தங்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துரத்தப்படும் அவலத்திற்கு ஆளாகின்றனர் பளியர்கள். இதற்கு கல்வியும் மருத்துவமும் துணை போவது தான் வருத்தம் அளிக்கிறது, இந்த பின்னணியை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
இறுதிக்காட்சியில் தங்கப்பனை ஏமாற்றி கொல்வதற்காக வாசி புலியை சுட்டது போல நடிப்பான். வாசி மனிதன் நடிக்கலாம், புலியும் இறந்தது போல நடிக்கிறது இது எல்லாம் சுத்த சினிமா தனம். மிருகங்களுக்கு பழிவாங்கும் குணம் இருப்பதே அரிது, அதிலும் இறந்த புலிக்காக அதன் குட்டிகள் பழிவாங்குவது உச்சகட்ட புனைவு.
✍️கோடி

Comments
Post a Comment