தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - எஸ். ராமகிருஷ்ணன்

வாசிப்பு 18

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - எஸ். ராமகிருஷ்ணன்





"கதை" இந்த இரண்டு எழுத்துக்கு இருக்கும் சக்தி கடவுளுக்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், கடவுளே இந்த கதைகள் மூலமாகத்தான் பரப்பப்பட்டு நம்முள் வாழ்ந்து வருகிறார்.

எப்பேற்பட்ட வாழ்க்கை வரலாற்றையும், இதிகாசத்தையும், உணர்வுகளையும், பிரச்சனைகளையும், காட்சிகளையும் கடல் நீரை உறிஞ்சும் மேகம் போல தனக்குக்குள் ஈர்த்து கொள்ளும் வல்லமை பெற்றது இந்த கதை. அக்கதைகளால் உறிஞ்சப்பட்டவைகளை கலைத்து மழையாக கொட்ட வைக்கும் வித்தை சில கைகளுக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றவை. அப்படி எஸ்.ரா அவர்களின் கைகளால் கொட்டிய மழையின் 16 சிறு துளிகளின் சங்கமமே "தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்".

இந்த சிறுகதை தொகுப்பில் எந்த ஒரு கதையையும் இங்கே நான் விவரிக்க போவது இல்லை. இது சொல்லப்பட வேண்டிய கதைகளும் இல்லை. ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டிய கதைகள். பிரச்சனைகளால் துரத்தப்பட்டு... நெருக்கடியால் வாழ்க்கை நிலைகொள்ளாமல் தவித்த போதும் தன் கொள்கைகளை, ஆசைகளை, லட்சியங்களை, உணர்வுகளை உடும்பு பிடியாகப் பிடித்து சமநிலை தவறாத சகமனிதர்களின் உடலுக்குள் தன் எழுத்துக்கள் மூலம் நம் ஆத்மாவை நுழைத்து சித்து வேலை செய்யும் ஒரு  எழுத்து சித்தனாக புத்தகம் முழுவதும் பரவியுள்ளார் எஸ்.ரா.

மொத்தம் 16 கதைகளில் பல கதைகளின் முடிவுகள் அப்படியே முடியாமல் கேள்விகளுடன் அடுத்த கதைக்கு நகர்கிறது. உண்மையில், அவைகள் கேள்விகள் இல்லை.. ஒரு வெற்று இடம். ஆம், வாசகனுக்காக ஆசிரியர் அமைத்த வெற்றுஇடம். அதை நிரப்பக் கூடியவர்  நீங்களாக கூட இருக்கலாம் நிரப்பத் தயாரா....

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு