மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின்

வாசிப்பு 7

மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின்

சிறுவயதில் நமக்கு ஒரு நீதிக் கதை சொல்லப்படும். அதில், ஒரு நரி கடினமான பசியில் உயரத்தில் இருக்கும் திராட்சைக் கொத்தைப் பறிக்க நினைக்கும். ஆனால், பல முறை முயற்சித்தும் பறிக்க முடியாமல்.. கடைசியில், "ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடும்.

அப்படிச் சென்ற நரிக்கு, திராட்சை என்ற நினைவே மறந்து போனபிறகு.. எதிர்பாராமல், ஒரு திராட்சைக் கொத்தே கிடைத்தால் எப்படி இருக்கும். அதுபோலத்தான், எனக்கு இந்த புத்தகத் தலைப்பு கிடைத்தது. ஒரு காலத்தில் கடவுள்களின் உண்மை வரலாற்றை (புராணங்களை தவிர்த்து), அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அது சம்மந்தமான புத்தகங்களை, தேடித்தேடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என் தேடலுக்கு அதிகமாக விடை தந்தது தொ.பரமசிவம் அவர்களின் புத்தகங்கள் தான்.

பல கடவுள்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொண்ட எனக்கு, மதுரை மீனாட்சியின் உண்மைக்கதை மட்டும் நரிக்கு எட்டாத திராட்சைப் பழமாகவே இருந்தது. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அது கிடைக்காது என்று முடிவுகட்டி, என் எண்ணங்களை வேறு விதமான புத்தகங்கள் நோக்கி திருப்பிவிட்டேன். அந்த நேரத்தில் எதேச்சையாக இந்த புத்தகம் என் கண்ணில் பட, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறி விட்டது.. உடனே வாங்கிவிட்டேன்.

இந்த புத்தகம் எனக்கு திருப்தியாக இருந்ததா என்று கேட்டால், இல்லை என்பதே உண்மை. நான் தேடியது மண்ணின் மதுரை மீனாட்சி வரலாற்றை... ஆனால், இதில் தமிழ் கடவுள்களை எப்படி புராணத்தின் மூலம் கீழ்நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்பதைப் பற்றியது. இருப்பினும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் , நாம் அறியப்படாத மண்ணின் கதைகளையும், கதையைத் தாண்டிய உண்மைகளையும் போட்டு உடைக்கிறது. வடநாட்டு இந்து மதத்திற்கும், தமிழ்நாட்டு இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய விதம், நாம் புத்தகத்தை வியக்கவைக்கும் இடம்.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் டார்வின் யார் என்பது தெரியவில்லை. பல உண்மைகளை தோலுரித்து காட்டுகிறார். மதுரையின் நெடிய வரலாற்றில், மீனாட்சி என்ற அரசி ஆட்சி செய்ததாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அப்படி ஒரு பெரிய அரசி யாரும் இல்லை. ஆனால், மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாட்சி என்ற கடவுள் எப்படி படிப்படியாக உருவாகி, இன்று இருக்கும் கடவுளாக ஆனார்.. என்பதற்கு ஒரு நெடிய வரலாற்றை அருமையாக எளிய முறையில் பாடம் சொல்லுகிறது இந்த புத்தகம்.

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு